July 31, 2018
தண்டோரா குழு
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ‘மெர்சல்’.அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது.
மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.உலக திரைப்பட விழாக்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன் மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில்,தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது.இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் படத்தை தேர்வு செய்து திரையிட்டனர்.இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.