December 4, 2018
தண்டோரா குழு
யூடியூபில் புகழ்பெற்ற ஆந்திராவை சேர்ந்த 107 வயது சமையல் கலைஞர் மஸ்தானம்மா காலமானார்.
ஹைதராபாத்தை சேர்ந்த கே. லட்சுமனன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த்ரெட்டி ஆகியோரால் 2016ம் ஆண்டு country food என்ற யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது. பின் லட்சுமனனின் தூரத்து சொந்தமான மஸ்தானம்மா என்ற பாட்டி கத்திரிகாய் கறி சமைக்கும் வீடியோவை யூட்யூபில் வெளியிட்டனர். அதை 75,000ம் பேர் பார்த்தனர். இதன் மூலம் மஸ்தானம்மா பாட்டி யூடியூபில் மிகவும் பிரபலமானார்.
ஆந்திர மாநிலம் குண்ட்டூரை சேர்ந்த இவர் யூட்யூபில் ருசிகரமான உணவு வகைகளை சமைத்து இந்த இரண்டு வருடத்தில் 12 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை தனக்குள் வைத்துள்ளார். அனைத்து வகையான உணவையும் செய்யும் மஸ்தானம்மாவிற்கு கடல் உணவு செய்வதில் கைதேர்ந்தவர். கிராமத்து முறையில் கே.எப்.சி சிக்கன், காபாப் உள்ளிட்டவைகளையும் சமைத்து அசத்தியுள்ளார். சென்ற ஆண்டு இவரது 106 வது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அனுப்பி வைத்த பணத்தில் கொண்டாடினார். 11 வயதில் திருமணம் நடந்த மஸ்தானம்மாவுக்கு, மொத்தம் ஐந்து குழந்தைகள், தற்போது ஒருமகன் மட்டும்தான் இருக்கிறார். 22ம் வயதில் தன் கணவனை இழந்த மஸ்தானம்மா, அவராகவே தன் குழந்தைகளை வளர்த்தார்.
இந்நிலையில்,கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மஸ்தனம்மா காலாமானார். பல வகையான உணவையும் சமைத்து அனைவரையும் மகிழ்வித்த மஸ்தனம்மா இன்று இல்லை, இது அவரது ரசிகர்களுக்கு பேரிழப்புதான்.