February 15, 2017
தண்டோரா குழு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சபதம் செய்தார்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உட்பட அவரது உறவினர்கள் மூன்று பேரையும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்திலிருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மவுனமாக சிறிது விநாடிகள் தியானம் செய்தார். அதன் பின் நினைவிடத்தைச் சுற்றி வந்த சசிகலா, ஜெயலலிதா சமாதி மீது 3 முறை அடித்து, மிகவும் ஆக்ரோஷமாக சபதம் செய்தார். பின்னர் யாரிடமும் ஏதுவும் பேசாமல் வேகமாக பெங்களூரு கிளம்பிச் சென்றார்.
அதைப் பார்த்து கொண்டிருந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.