January 30, 2017
தண்டோரா குழு
மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்குழு அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு விழாக் குழவினர் திங்கள்கிழமை சந்தித்த பிறகு இதை அறிவித்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்களன்று ஒப்புதல் வழங்கினார்.
அதையெடுத்து ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தைத் திங்களன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “மதுரை அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதியும் அலங்காநல்லூரில் பிப்ரவரி 10ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்” என்று அறிவித்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த முதல்வருக்கும், போராடிய மாணவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜல்லிக் கட்டுக் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அத்துடன், அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்ததாகவும் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.