January 12, 2023
தண்டோரா குழு
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஆன்மீக மற்றும் நவீன அறிவியல் மகளிர் கல்வி நிலையத்தில் 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் ஆன்மீக மற்றும் நவீன அறிவியல் கல்வி நிலையம் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கென அரபி மொழி பட்டயபடிப்புகள் மற்றும் அலுவலக மேலாண்மை,கணிணி மற்றும் தொலை தொடர்பு தொடர்பான டிப்ளமோ வகுப்புகள் இலவசமாக கற்று தரப்படுகிறது.
இந்நிலையில் இக்கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கான 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்வி நிலைய அரங்கில் நடைபெற்றது.கல்வி நிலையத்தின் செயலாளர் அமீர் அல்தாப் தலைமையில் நடைபெற்ற இதில்,தலைவர் நயினார் முகம்மது, அறங்காவலர் ஜான் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்,சென்னை மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் சம்சு அலி ஆகியோர் கலந்து கொண்டு பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
முன்னதாக விழாவில் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,பெண்களுக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதையும்,குறிப்பாக நவீன கால உலகில், கல்வியுடன் வாழ்வியல் ஒழுக்கத்தை பேணுவதன் அவசியம் குறித்தும் பேசினார்.விழாவில் 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி நிலையத்தின் செயலாளர் அமீர் அல்தாப்,
குடும்பத்தையும் கவனித்து கொண்டு இவ்வாறு கல்வி பயின்று வரும் பெண்களுக்கு அரசு முன்வந்து கல்வி தொகை உதவி தொகை போன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.