March 14, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் காரமடை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் சின்ராஜ் மற்றும் சீனிவாசன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக 2 நபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அந்த நபர்கள் காவலர்களை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடினர். அவர்களை காவலர்கள் துரத்தி அதில் ஒருவரை பிடித்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் கத்தி-1, பெரிய இரும்பு கம்பி-1 ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பிடிபட்டவரை விசாரிக்க அவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (30) என்பது தெரியவந்து, மேற்படி நபரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இரவு அலுவலில் குற்றம் ஏதும் நடவாமல் தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.