May 23, 2022
தண்டோரா குழு
தமிழகத்தில் மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதால் விலை உயர்வினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தக்காளிகளை வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் கோவையில் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவையில் உள்ள கூட்டுறவு துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம் கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர் சாலை கிளை அலுவலகம், மலர் அங்காடி கட்டிட வளாகம் பூ மார்க்கெட், ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம் ,டெலுங்குபாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், கோவை மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம் , ஒண்டிபுதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ 75 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.