July 3, 2017
தண்டோரா குழு
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. இதனால் முதல்வர் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று அவர் வெற்றி பெற்றார்.
இதற்கிடையில், வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.அப்போது கூவத்தூர் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே சென்னை ராயபுரம் மீனவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர்.அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் சட்டவிரோதமாக கட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதுமட்டுமின்றி கடலோர ஒழுங்குமுறை விதியில் இருந்து கூவத்தூர் விடுதிக்கு விலக்கு ஏதும் தரவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, கூவத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மீனவர்கள் நல சங்கத்தினர்மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்குபுகார் மனு அனுப்பியுள்ளனர்.