March 14, 2025
தண்டோரா குழு
கோவை மாநகரில் செயல்படும் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான VGM மருத்துவமனை இப்போது அதிநவீன செரிமான நலத்துறை சிகிச்சை வழங்குவதை தொடர்ந்து, மேம்பட்ட வசதிகள் மற்றும் புதிய சிறப்புகளுடன் கூடிய பல்துறை சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி இரைப்பை குடல் நிபுணர்களில் ஒருவரான டாக்டர். வி.ஜி. மோகன்பிரசாத் அவர்களால் 2009ல் கோவை சிங்காநல்லூரில் 40 படுக்கைகள் கொண்ட மையமாக துவங்கப்பட்ட VGM மருத்துவமனை,இன்று 20 மருத்துவ சிறப்பு பிரிவுகளுடன் 150 படுக்கைகள் கொண்ட அதிநவீன மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. NABH எனும் மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்தை தேசிய அளவில் பெற்ற முதல் செரிமான நலத்துறை சிகிச்சை மருத்துவமனை என்ற பெருமையும் 2 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு வெற்றிகரமான சிகிச்சை வழங்கிய பெருமையும் இம்மருத்துவமனைக்கு உள்ளது. இதில் 50% பேர் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து கல்லீரல் நல குறைபாடுதான் வந்து சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செரிமான நலத்துறை சிகிச்சையில் மக்களுக்கு மகத்தான மருத்துவ சேவைகளை 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக வழங்கியதை அடுத்து இப்போது VGM மருத்துவமனை அதன் வளாகத்தில் 6 தளங்கள் கொண்ட கல்லீரல் மற்றும் சிறுநீரக சிகிச்சைக்கான கட்டிடத்தை கட்டி அதில் சிறப்பான மருத்துவ சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
மருத்துவமனையின் விரிவாக்கம் குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் VGM மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் வி.ஜி. மோகன்பிரசாத், கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த விரிவாக்கம் என்பது VGM மருத்துவமனை வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாக பார்ப்பதாக கூறிய அவர், எப்படி செரிமான நலத்துறை சிகிச்சையில் பிரிவில் மக்களுக்கு சிறப்பான சிகிச்சைகளை இம்மருத்துவமனை வழங்கியதோ அதேபோல இந்த புது சிறப்பு பிரிவுகளில் வழங்கப்படும் சேவைகள் என்பது இருக்கும் என அவர் கூறினார்.
எங்கள் மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சைகள் மேல் நன்மதிப்பு கொண்டு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த விரிவாக்கத்தை செய்ததன் மூலம் நாங்கள் வழங்கவுள்ள சிகிச்சைகளால் செரிமான நலத்துறை சிகிச்சை பிரிவை கடந்து, பிற சிகிச்சைகளை எங்கள் வழங்க முடியும், என்று அவர் கூறினார்.
இந்த புது கட்டிடத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, அதிநவீன இருதயவியல் கேத் லேப், ஒரு பிரத்யேக கல்லீரல் ICU, ஒரு டயாலிசிஸ் பிரிவு, கதிரியக்கவியல் சேவை பிரிவு மற்றும் பிரத்யேக உள்நோயாளி அறைகள் போன்ற வசதிகள் அடங்கும்.
இதன் திறப்பு வரும் மார்ச் 16 (ஞாயிறு) காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த நிகழ்வில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வடமலை தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்.
வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் திரு. ஹர் சஹாய் மீனா, ஐஏஎஸ்; தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜி. பிரகாஷ், ஐஏஎஸ்; தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் கே. வீர ராகவ ராவ், ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர். மித்ரா பிரசாத் கலந்து கொண்டு இந்தியாவில் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்தார்.
“இந்தியாவில் ‘ஹெபடைடிஸ் பி’ எனும் கல்லீரல் பாதிப்பை ஏற்படும் தொற்றை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளோம், ஹெபடைடிஸ் சி-ஐ ஓரளவு கட்டுப்படுத்தி உள்ளோம். இருந்தாலும், உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் கல்லீரல் நோய் பாதிப்புகளை அதிகரிக்கின்றன,” என அவர் குறிப்பிட்டார்.
அதிகப்படியான மது அருந்துதல் மற்றொரு முக்கிய காரணமாகும், இது கல்லீரல் சிரோசிஸ் எனும் கல்லீரல் திசு பாதிப்பையும், கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கிறது. பல நேரங்களில் இப்படி பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
“இந்த புது கட்டிடத்தில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய நாங்கள் அரசின் அனுமதி பெற்றுள்ளோம். இது போன்ற உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் இம்மருத்துவமனையின் எண்டோஸ்கோப்பி துறை இயக்குனர்களான டாக்டர் மதுரா பிரசாத் சுமன் மற்றும் டாக்டர் வம்சி மூர்த்தி ஆகியோர் கூறுகையில்,
இன்று உடல் பருமனால் மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை உடலில் சிறு துளையிட்டு செய்யும் லேபராஸ்கோபி வழிமுறை மூலம் கிடைக்கும் அதே பலனை அவ்வாறு துளையிடாமல் எண்டோஸ்கோபி வழியாக செய்யக்கூடிய வசதிகள் வந்துள்ளது. இந்த சேவையையும் எங்கள் மருத்துவமனையில் நாங்கள் வழங்கிவருகிறோம். இதன் விளைவாக ஏற்படும் எடை குறைப்பு ஆரம்பகால சிரோசிஸை மாற்றியமைக்க கூடியதாக அமையும் மேலும் இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் தேவையைத் தடுக்க கூடும் என்றனர்.
மருத்துவமனையின் புதிய கேத் லேப், இதுபோன்ற கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்களின் இதயம் சீராக உள்ளதா என்பதை அறிந்துகொள்ள உதவும். அறுவை சிகிச்சைக்கு முன் அவர்களின் இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருக்கிறதா, அதனால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது பற்றி இதன் மூலம் அறிந்து கொண்டு, இந்த கேத் லேப்பிலே அவர்களுக்கு ஏஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் செய்து அதன் பின்னர் அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்றார்.
மேலும் இருதயவியல் ஆய்வுகளான எக்கோ கார்டியோகிராம்கள், டிரெட்மில் சோதனைகள் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப்கள் உள்ளிட்ட விரிவான இருதய பரிசோதனைகளை இப்போது வழங்கமுடியும் என அவர் கூறினார்.