July 3, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சென்றடைய நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் போட்டி தேர்வை எழுதுங்கள், அரசுப்பணியில் சேருங்கள் என்ற பல்வேறு விழிப்புணர்வு குறித்த விளம்பர பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திய வண்ணம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளாகத்திலிருந்து புறப்பட்டு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வழியாக அரசு கலை கல்லூரியை சென்றடைகின்றனர்.
இப்பேரணியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,
“தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் இன்று தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. தொழில்நெறி வழிகாட்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெற்று பயனடைய வேண்டும்.
மேலும் தொழில்நெறி வழிகாட்டி விழிப்புணர்வு குறித்த அரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கில் பாரத பிரதமர் அவர்களின் திறன் மிகு இந்தியா திட்டம், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம், தனியார் துறை வேலைவாய்ப்பு ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெறுவது குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மீனாட்சி, துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஒ.எஸ்.ஞானதேசிகன், கஸ்தூரி மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.