October 13, 2022
தண்டோரா குழு
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், சேரன் காலனியைச் சேர்ந்த சதாம்உசேன் (32) மற்றும் துடியலூர் ஆர்.எஸ்.தோட்டம் , நேரு வீதியைச் சேர்ந்த அகமது சிகாபுதீன் (24) ஆகியோர் கடந்த 22.09.2022 ஆம் தேதி கோவை மாநகர் வி.கே.கே.மேனன் ரோட்டில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு அருகே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சி 1 காட்டூர் காவல் நிலைய போலீசார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேற்படி இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி,தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நகல்கள் கோவை மத்திய சிறையில் மேற்படி இருவருக்கும் வழங்கப்பட்டது.