December 9, 2024
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான்,கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 குற்றவாளிகள்(DRUG OFFENDERS)மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், ஆலந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கோவை P.N. புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30),கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31), ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31), காளிமுத்து மகன் *சரவணகுமார் (26) மற்றும் கோவைசாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரி மகன் நிஷாந்த் (23) ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் *Dr.K.கார்த்திகேயன்,பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி போதை ஏற்படுத்தக்கூடிய காளான்,கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கின் குற்றவாளிகளான அமரன் (30),ஜொனாதன் சதீஷ் (31), பிரசாந்த் (31), சரவணகுமார் (26) மற்றும் நிஷாந்த் (23) ஆகிய ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 21 கஞ்சா வழக்கு குற்றவாளிகள்(DRUG OFFENDERS) உட்பட 71 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.