March 15, 2022
தண்டோரா குழு
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கடந்த 09-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
தேர்நிலைத் திடலில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிள் உள்ளிட்டோர் தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தேர்நிலைத் திடலில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கிழக்கு வீதியில் உள்ள திடலுக்கு வந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.