April 14, 2023
தண்டோரா குழு
கோவை மதுக்கரை வனப்பகுதியில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதேகவுண்டன்புதூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 11ம் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசியதால் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்து திடுக்கிட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் உள்பட 40 பேர் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீவிபத்து ஏற்பட்ட இடம் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவிலான வனம் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் பாறை பகுதியில் பற்றி எரிந்த தீ மூங்கில் மற்றும் வனப்பகுதியில் பரவி உள்ளது. இதை அடுத்து 4வது நாளான தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘மதுக்கரை ரேஞ்சில், 11ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. 50 ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில், 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், கடந்த 2 நாளாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போது மரத்திட்டுக்கள் மற்றும் காய்ந்த மூங்கில் திட்டுக்களின் கீழ் மலைப்பகுதி வரை தீ பரவி உள்ளது. தீயணைப்பு குழுவினர் கீழ் மலை மற்றும் மேல் மலை பகுதியில் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைப்பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பாகும். இதில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்து சாம்பலாகி விட்டது’ என்றனர்.