October 20, 2022
தண்டோரா குழு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் 3596 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை செப்டம்பர் 5ம் தேதி தமிழக முதலமைச்சர் சென்னையில் துவங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர்கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச்சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம்அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 199 கல்லூரிகளை சேர்ந்த 3596 மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றது.
கல்வி என்னும் நிரந்தர சொத்தினை பெண்கள்அனைவரும் பெற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்