February 11, 2022
தண்டோரா குழு
கோவை வங்கியில் போலி ஆவணங்களை வழங்கி ரூ.10.73 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கி மேலாளர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (39) என்பவர் போலியான ஐவுளி ஆலைகளின் ஆவணங்களை தயார் செய்து, கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வங்கி மேலாளர் ராஜேஷ் (48) என்பவரின் உதவியுடன் ரூ.10.73 கோடி கடனாக பெற்றார். மேலும் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டியும், அசலும் கட்ட தவறினார்.
இது குறித்து வங்கியின் மூத்த மேலாளர் ஜெகன்குமார் வங்கியின் மேலாளரிடம் கேட்டார். அப்போது கடனாக பெற்ற ஆவணங்களை ஜெகன்குமாரிடம் மேலாளர் வழங்கினார். அதனை ஆய்வு செய்தபோது ஜெகன்குமார் வழங்கிய 17 ஆவணங்கள் போலியான ஆவணங்கள் என்பதும், இல்லாத ஜவுளி மில்களின் பெயரில் ஆவணங்களை தயாரித்து வங்கியில் ரூ.10.73 கோடி கடன் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கனகராஜ் மீதும், இதற்கு உடந்தையாக வங்கி மேலாளர் ராஜேஷ் மீதும் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வங்கியின் மூத்த மேலாளர் ஜெகன்குமார் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வங்கி மேலாளர் ராஜேஷ்,கனகராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த கோவையை சேர்ந்த கார்த்திகேயன், ராதிகா, சம்பத்குமார், துரைராஜ், மகேஸ்வரி, ராஜூ ஆகியோரை கைது செய்தனர்.