May 12, 2017
தண்டோரா குழு
செருப்பு திருடிய சிறுமிக்கு இரக்கம் காட்டி பீட்சா வாங்கிக் கொடுத்த அட்லாண்டா காவல்துறை அதிகாரியின் நல்ல உள்ளத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஜார்ஜியா நாட்டின் அட்லாண்டா நகரிலுள்ள காவல் நிலையத்தில் பணிபுரிபவர் அதிகாரி மில்டன். அட்லாண்டாவில் உள்ள ஒரு செருப்பு கடையில் 12 வயது சிறுமி செருப்பு திருடும் போது அவளை கையும் களவுமாக மக்கள் பிடித்துள்ளனர்.
இது குறித்து அவருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற அவர், அது குறித்து விசாரித்தார். அப்போது 2 டாலர் மதிப்புள்ள காலணியை திருடும் போது, அவள் பிடிபட்டதாக அந்த கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இது குறித்து மில்டன் சிறுமியிடம் விசாரித்த போது, அவள் கூறுகையில் “எங்களுடைய வறுமையான குடும்ப சூழ்நிலையால், என் சகோகதரி விரும்பி கேட்ட காலணியை வாங்க முடியவில்லை. இந்த காரணத்தால் தான், அந்த காலணிகளை திருடினேன்” என்று கூறினாள்.
இதை கேட்ட மில்டன் இரக்கம் கொண்டு அந்த சிறுமியை தண்டிக்காமல், அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த சிறுமியின் தந்தையும் அவளது நான்கு சகோதரிகளும் கஷ்டப்படுவதை பார்த்து இரவு உணவிற்கு அவர்களுக்கு நான்கு பிட்சா மற்றும் குளிர்பானங்களை வாங்கி தந்துள்ளார்.
அவருடைய இந்த தன்னலமற்ற செயல், அவருடைய நண்பர் மூலம் மற்றவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அட்லாண்டா காவல்துறையினர் பேஸ்புக் மூலம் நன்கொடை கேட்டு, அந்த குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தந்து உதவியுள்ளனர்.