June 30, 2017
தண்டோரா குழு
மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேர் சரணடைய, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதற்காக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகிய 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு, கடந்த 2011-ம் ஆண்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் மற்ற மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஐந்து பேருக்கு அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை சென்னை மாவட்ட 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதி செய்தது.இந்நிலையில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஐந்து பேரும் ரம்ஜான் நோன்பைக் காரணம் காட்டி சரணடைய ஒரு வாரக்கால அவகாசம் கேட்டனர்.இந்தகால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.மேலும் ஜவாஹிருல்லா உட்பட 5 பேரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜவாஹிருல்லா உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.