January 26, 2017
தண்டோரா குழு
“மறைந்த தமிழக முதலமைச்சர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை மற்ற மாநிலங்களும் இதர நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி தருகிறது” என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
“நமது முன்னோர்கள் கண்ட கனவுப்படி நாட்டை வளமாக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
மகாராஷ்டிர ஆளுநராக இருப்பதால் மும்பையில் தேசியக்கொடி ஏற்றினேன். அதனால், தமிழகத்தில் தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் “அம்மா உணவகம்” போன்ற பல திட்டங்கள் ஏழைகளின் சுமையைக் குறைத்துள்ளன. இந்த திட்டங்களை மற்ற மாநிலங்களும், பிற நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி பெறுவோர் 99. 85 சதவீதம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது”.
இவ்வாறு வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டார்.