February 25, 2017
தண்டோரா குழு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக அப்பல்லோ மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ராம சீதாவை சைபர் கிரைம் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 75 நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் ராம சீதா என்பவர், ”ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அது சமூக வலைதளங்களில் பரவியது.
அந்தப் பதிவில், “ஜெயலலிதா மருத்துவமனைக்கு ஒரு சாதாரண நோயாளியைப் போலத்தான் கொண்டுவரப்பட்டார். மருத்துவமனையில் அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு ஜெயலலிதாவுடன் ரத்த சம்பந்தமான உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைக்கு, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை. ஆகையால், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் ராமசீதா கூறியிருந்தார்.
இதையடுத்து அவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை ராம சீதா நேரில் சந்தித்து ஜெயலலிதா சிகிச்சை குறித்து பேசியிருந்தார்.
இது குறித்து, அப்பல்லோ நிர்வாகம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தது. அந்தப் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீசார் ராமசீதாவைச் சனிக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார், “தொடக்கத்தில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக சேவை செய்தவர் என்று பரவலாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், ராமசீதா மருத்துவர் அல்ல, ஊட்டச்சத்து வல்லுநர் என்பதும் தெரியவந்துள்ளது” என்று போலீசார் கூறினர்.