December 20, 2016
தண்டோரா குழு
நூறு கிராமங்கள் விரைவில் மத்திய அரசின் டிஜிட்டல் கிராம திட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தில்லியில் டிஜிட்டல் இந்தியா திட்டம் விருது வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து பல நகரங்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியதாவது:
அனைத்து நவீன வசதிகளும் உடைய, 100 டிஜிட்டல் கிராமங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த கிராமங்களில் கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளுடன் உலக தரத்தில், வைபை (கம்பியில்லா இணைய இணைப்பு) வசதி வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப தொடர்பு முழுமையாக ஏற்படுத்தப்படும். இவை, நாட்டின் முன் மாதிரி கிராமங்களாக திகழும்.
இந்தியாவை ‛டிஜிட்டல்’ மயமாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இன்டர்நெட் வழியாக ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய அரசு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, கடந்த 4 நாள்களில் 18 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 2017, மார்ச் மாதத்துக்குள் 1.25 கோடி பேருக்குப் பயற்சி அளிக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.