March 6, 2023
தண்டோரா குழு
கோவை பீளமேடு டைடல் பார்க் வளாகத்தில் எல்கார்ட் நிறுவனத்தால் 114.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சத்து 94 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி நிறுவனங்களுக்காக புதிய கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்த பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி , மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இளைஞர்கள் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்.பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் பகுதி கோவை. இங்கு
எல்கார்ட் நிறுவனம் மூலமாக டைடல்பார்க் வளாகத்தில் கட்டபட்டு வந்த கட்டுமான பணி தாமதமாக இருந்ததால் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் உத்திரவிட்டார். இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிட்டம் 114 கோடி மதிப்பீ்ட்டில் 6 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது.தீயணைப்பு வசதி,லிப்ட் வசதி,பார்க்கிங் என அனைத்து வசதிகளும் கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த வளாகத்தில் 26 கம்பெனிகளுக்கு இடம் கொடுக்க முடியும்.இதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். ஒப்பந்த்தாரர்கள் வரும் ஏப்ரல் 30 ம் தேதிக்குள் இந்த கட்டுமான பணி முடிவடையும் என தெரிவித்து இருக்கின்றனர்.அதன் பின்னர் 26 நிறுவனங்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்படும். அதன் மூலம் 14,000 பேர் வரை வேலை வாய்ப்பு பெற இருக்கின்றனர்.
கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அமைய இன்னும் கூடுதலாக கட்டிடடம் தேவை இருக்குமானால் அரசு இடங்கள், தனியார் இடங்களை கைபடுத்தி கட்டப்படும். இளைஞர், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது.
தமிழகத்தில் பொறியில் பட்டதாரிகள் அதிகம். மாவட்ட தலைநகரங்களிலும்தேவை இருக்குமானால் ஐ.டி நிறுவனங்களுக்கு கட்டிடவசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.