April 18, 2017
தண்டோரா குழு
பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடிகள் கடன் வாங்கியிருந்தார்.
வங்கிகளில் வாங்கிய கடனை, விஜய் மல்லையா திரும்ப செலுத்தாததை தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதனால் அவருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே அவர் கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பித்துச் சென்றார்.
அங்கிருந்து அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவரை நாடு கடத்தவும் இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து,லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்திய அரசு முயற்சி செய்து வந்தது. இந்நிலையில், இன்று லண்டனில் விஜய் மல்லையாஇங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தொடர்ந்து வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.