March 29, 2017
தண்டோரா குழு
கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்களை வெளியிட்ட தனியார் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து இந்திய தனிமனித அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.இப்பணியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் தோனி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோவையும் , அவரது ஆதார் விண்ணப்ப போட்டோவைவும் டுவிட்டரில் பெருமையுடன் வெளியிட்டது.
தோனியின் ஆதார் விவரங்கள் வெளியானதால் கோபமடைந்த அவரது மனைவி சாக்ஷி மத்திய தகவல் தொடர்புத்துறை மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாக்ஷியிடம் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், தோனியின் ஆதார் விவரங்களை வெளியிட்ட விஎல்இ (Village Level Entrepreneur) நிறுவனத்தை 10 ஆண்டுகள் எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாத கருப்புப் பட்டியலில் வைக்க இந்திய தனிமனித அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆதார் அட்டைக்கான பணியின் போது சேகரிக்கப்படும் தனி மனிதர்களின் விவரங்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய்பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.