May 10, 2017
தண்டோரா குழு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி செவ்வாய்க்கிழமை (நேற்று) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிபதி கர்ணனை கைது செய்ய காவல்துறையினர் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, சென்னை வந்த நீதிபதி கர்ணன் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
இதையடுத்து, கொல்கத்தா போலீஸார் சென்னை வந்திருந்தனர். கைது நடவடிக்கை தொடர்பாக மேற்குவங்க டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 4 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில்,நீதிபதி கர்ணன் இன்று அதிகாலை காளஹஸ்தி கோயிலுக்கு சென்றிருப்பதாக தமிழக காவல் துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் காளஹஸ்தி செல்லவுள்ளனர்.
கொல்கத்தா போலீசாருடன், தமிழக காவல்துறையினரும் காளஹஸ்தி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.