February 21, 2017
தண்டோரா குழு
“பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்” என அதிகாரிகள் கூறினர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், “குண்டு வெடிப்புத் தாக்குதலையடுத்து, அங்கு பலர் இறந்து கிடந்ததை நான் பார்த்தேன்” என்றார்.
“தீவிரவாதிகளின் தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் அந்த நீதிமன்ற வாளாகத்தைத் தாக்கியபோது நான் அங்குதான் இருந்தேன். நீதிமன்றத்தில் பின் பகுதியில் இருந்த உணவகத்தின் சுவரில் ஏறி குதித்து உயிர் தப்பினேன். ஆனால், அங்கு பலர் இறந்து கிடந்தனர்” என்று அந்த நகரத்தில் வசிக்கும் முஹம்மத் ஷா பாஸ் என்பவர் தெரிவித்தார்.
அம்மாவட்டத்தின் காவல்துறை தலைமை அதிகாரி கூறுகையில், “வளாகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளான். மற்றொருவன் அங்கு இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டான். அங்கு விரைந்த போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவன் உயிரிழந்தான்.
“பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு நகரமான சரசட்டாவில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானி தலிபான் உர் அஹ்ரர் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது” என்று அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அசாத் மன்சூர் கூறினார்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜமாத்-உர்-அஹ்ரார் என்ற தலிபானின் இன்னொரு தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளது. ஆஸாத் மன்சூர் என்ற அந்த அமைப்பைச் சேர்ந்தவர் இத்தகவலை ஊடகங்களுக்குத் தகவலாக அனுப்பியுள்ளார்.
கடந்த பத்து நாட்களில் இதுபோன்ற தாக்குதல்களில் மொத்தம் நூறு பேர் உயிரிழந்தனர்.