December 29, 2022
தண்டோரா குழு
கோவை, நேருநகர், சித்ரா பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை, நேருநகர் சந்திப்பு முதல் வீரியம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை காணப்படும் 60 அடி சாலையில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொது மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
சித்ரா பேருந்து நிலையத்தை, நேருநகர் குறத்தி குட்டை பகுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மேற்கொண்டார். இதற்காக குறத்தி குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளவர்களை கீரணத்தம் சாலையிலுள்ள கரட்டுமேடு பகுதிக்கு இட மாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் இத்திட்டம் தொடர்பான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கைவிடப்பட்டது.
இங்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் மேட்டுப்பாளையம், நீலகிரி, சத்தியமங்கலம், மைசூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகளை இயக்க முடியும். இதனால் சரவணம்பட்டி, அன்னூர் பகுதிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.