May 30, 2017
தண்டோரா குழு
பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்திலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டாலின், திருநாவுகரசர், முத்தரசன், ராமகிருஷ்ணன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். உணவுக்கான உரிமையை மத்திய அரசின் முடிவு தகர்த்து எறிகிறது.மத்திய அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம். எதை உண்ண வேண்டும் என்பதை நிர்ணயிக்க அரசுக்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழக அரசு மவுனத்தை கலைத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.