June 28, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நிகர் நான் தான் என்று சொல்லிவந்தவர் பவர் ஸ்டார். இவர் நடிப்பது மட்டுமல்லாது சென்னையில் உள்ள வங்கிகளில் பணம் வாங்கித்தரும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.
2013ம் ஆண்டே ரூ.10 கோடி வாங்கி கொண்டு ரூ.1000 கோடி கடனாக வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு அண்மையில் ஜாமீன் மூலம் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மசூர் அலாம் மற்றும் அவரது சகோதரர் சஜ்ஜாத் வஹாப் பெங்களூரு போலீசாரிடம் பண மோசடி புகார் ஒன்றை அளித்தனர். அதில், “ரூ.30 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு ரூ.1 கோடியை சீனிவாசன் முன்னதாகவே வாங்கினார். ஆனால் சீனிவாசன் இதுவரை கடன் பெற்றுத் தரவில்லை. கமிஷனாக பெற்ற ரூ.1 கோடியையும் திருப்பித் தரவில்லை” என குறிப்பிட்டு இருந்தனர்.
இதனையடுத்து பவர் ஸ்டார் சீனிவாசனை பெங்களூர் போலீசார் சென்னை வந்து கைது செய்து அவரை பெங்களூர் அழைத்து சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.