June 30, 2017
தண்டோரா குழு
திருமண விழாவில் மணமகன் ‘நாகினி’ பாம்பு டான்ஸ் ஆடியதால், பெண்ணின் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் ஷாஜகான்பூர் என்னும் நகரில் பிரியங்கா திரிபாதி என்பவருக்கும் அனுபவ் மிஷ்ரா என்பவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் செய்ய வேண்டிய அனைத்து சடங்கும் முடிந்துவிட்டது. திருமண விழாவை எதிர்நோக்கி இருந்தனர்.
சாலையில் ஆடல் பாடலுடன் மணமகனை திருமண மண்டபத்திற்கு அழைத்து வருவது வட இந்தியர்கள் முறையாகும். அந்த முறையின்மபடி மணமகன் அனுபவ் அழைத்து வரப்பட்டார். திருமண மண்டபத்தில் ‘நாகினி பாடல்’ இசைக்கப்பட்டபோது,குடிபோதையிலிருந்த மணமகன் நாகினி தொடரில் வரும் பாம்பை போல் நடனமாடியுள்ளார். அவருடைய நண்பர்களும் அவருடைய ஆட்டத்தை கண்டு பணத்தை வாரி வீசியுள்ளனர்.
மணமகனின் ஆட்டத்தைக் கண்ட மணப்பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மணப்பெண் பிரியங்காவும் இதை பார்த்துவிட்டு, இவர் தனக்கு ஏற்ற கணவர் இல்லை என்று முடிவெடுத்து, திருமணத்தை நிறுத்தி விட்டார். அனுபவின் குடும்பத்தினரின் பேச்சும் மிரட்டலும் மற்றும் நண்பர்களின் சமாதானமும் பிரியங்காவைவின் முடிவை மாற்றவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. பிரியங்கா சில தினத்திற்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.