October 20, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பல்வேறு சிறப்பு பண்புகளை கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் உள்ளது.
பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து ரக மேம்பாட்டு பகுதிக்கேற்ற சிறந்த ரகங்ளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா நடத்தப்பட்டது.இதில் விரிவாக்க கல்வி இயக்கம் இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஷபி அஹமது தலைமை தாங்கினார். இக்கண்காட்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு துண்டுபிரசுரங்கள், செங்காம்பு கறிவேப்பிலை நாற்று, பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்த தொழில்நுட்ப கையேடு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பாரம்பரியமிக்க கண்காட்சி அரங்கங்கள் 20க்கும் மேல் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் இயற்கை வேளாண் வழி விதைகள், பாரம்பரிய சிறுதானிய உணவுகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.