August 17, 2024
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 1964 முதல் 1969 வரை படித்து பி இ (BE) பட்டம் பெற்ற பட்டதாரிகளின் வைரவிழா சந்திப்பு வருகின்ற ஆகஸ்டு 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் குடும்பத்துடன் பங்குபெற 50 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் 1964-ஆம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது ஏற்பட்ட நட்பு கடந்த 60 ஆண்டுகளாக ஆல மரமாக வளர்ந்து இருப்பதை கொண்டாடும் பொருட்டு வருகின்ற ஆகஸ்டு மாதம் 17 – 18 தேதிகளில் வைரவிழா சந்திப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள்.
இவர்கள் படிக்கின்ற கால கட்டத்தில் மூன்று (Branches) பிரிவுகள் சிவில், எலெக்ரிகல் மற்றும் மெகானிக்கல் மட்டுமே இருந்தன. சிவில் பிரிவில் 17-ம், எலக்ரிகலில் 48-ம், மெக்கானிக்கலில் 75-ம் என மொத்தம் 140 மாணவர்கள் சக மாணவர்களாக பயின்றார்கள்.
படித்து முடித்தவுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசு துறைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிட்டியது. சிலர் (சுமார் 10 பேர்) வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் வேலைக்காகவும் சென்றார்கள்.G கண்ணப்பன் (கேஜி குழுமம்), விஜய் மோகன் (பிரிக்கால்), K சுதந்திரன் (பெஸ்ட் குழுமம், USA), B கோவிந்தராஜன் ( யுனைடெட் பவுண்டரி குழுமம்), K பொன்னுசாமி (இந்திரா இண்டஸ்ட்ரீஸ் குழுமம்) மற்றும் பலர் சுய தொழில் தொடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்புக்களை ஏற்படுத்தி சமுதாயத்தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு மின்சாரவாரியம், பொதுப்பணித்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றில் சேர்ந்து 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்கள்.இவர்கள் 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெள்ளிவிழா சந்திப்பினை வெகு சிறப்பாக நடத்தினார்கள். அப்போது 75 உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அதன் பிறகு ஆண்டுதோறும் உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்தியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தினர் கலந்து கொண்ட கூட்டங்களாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பொன்விழா சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் 85 பேர் (வெளி நாட்டவர் 5 பேர் உட்பட) குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அந்த கூட்டத்திற்கு தங்கள் ஆசிரியர்களை வரவழைத்து கெளரவப்படுத்தியது மறக்க முடியாத அனுபவமாகும்.மாணவர்களுக்கும், கல்லூரிக்கும்,சமுதாயத்திற்கும் 1969-ஆம் ஆண்டு மாணவர்கள் ஆற்றிய முக்கிய சமுதாயப்பணிகள் பணிகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ 50 லட்சம் முன்னாள் மாணவர் சங்க வங்கி கணக்கில்; டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் பெறப்படும் வட்டி தொகையை உதவித்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
2) PSG GRD மியூசியத்திற்காக ரூ 25 லட்சம் நன்கொடையாக 1969-ஆம் ஆண்டு மாணவர்கள் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
3) பொள்ளச்சி தாலூகா பகுதியிலுள்ள செம்மேடு மற்றும் சின்னார்பதி ஆகிய இரு கிராமங்களை தத்தெடுத்து அங்கு வாழும் ஏழை மக்களுக்கு தெவையான உதவிகளை செய்து வருகிறார்கள். செம்மேட்டில் பழுதடைந்த 55 வீடுகளை ரூ7.5 லட்சம் செலவில் புனரமைத்து கொடுத்துள்ளார்கள்.சின்னார்பதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு ரூ 5 லட்சம் செலவில் அடிப்படைத் தேவைகளையும் மருந்து பொருட்களையும் வழங்கியுள்ளனர். சின்னார்பதியில் ரூ 2.5 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டவும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது
4) 2021-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளுக்கு ரூ 6 லட்சம் செலவில் மருத்துவ உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது.
5) குஞ்சப்பனை மலைவாழ் மக்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய மேல்நிலைப்பள்ளி ஆய்வக புணரமைப்புப் பணி ரூ 3.5 லட்சம் செலவில் 2021-ஆம் ஆண்டு செய்து முடித்தோம்.
6) 2023-ஆம் ஆண்டு நரசிம்மநாயக்கன் பாளையத்திலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை ரூ 2.5 லட்சம் செலவில் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.இந்த ஆண்டும் இன்னும் பல சமுதாயப்பணிகள் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. வைரவிழா கூட்டத்திற்கு புலவர் ராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.