March 10, 2022
தண்டோரா குழு
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், கோவை மாநகர் மேற்கு மண்டலம் சார்பாக 41வது வார்டு கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினக்கூட்டம் பி.என்.புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநகர் மேற்கு மண்டல குழு செயலாளர் ஜேம்ஸ் இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜேம்ஸ் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது. கோகுலம்காலனி நகர் மையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.
நிகழ்ச்சியில், மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நந்தினி, மாவட்ட செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.