January 18, 2017
தண்டோரா குழு
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் போராட்டகாரர்களுக்கு உதவ ஒரு கோடி செலவானாலும் தருகிறேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் 24 மணி நேரத்துக்கு மேலாக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புதன்கிழமை காலையில் நேரில் சந்தித்த நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போராட்டாக்காரர்களுக்கு குடிநீர், சாப்பாடு, மருத்துவ வசதி போன்றவை இல்லாமல் இருப்பதாக அறிந்தேன். போராட்டாக்காரர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளேன். ஒரு கோடி செலவானாலும் நான் தருகிறேன். இப்போது நான் சென்று இங்குள்ளவர்களுக்குத் தேவையான சாப்பாடு, உணவு, மருத்துவ வசதிகளைக் கொண்டு வரச் செல்கிறேன். தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்” என்றார்.