March 31, 2017
தண்டோரா குழு
கடந்த ஆறு மாதமாக இலவச சேவைகளை வழங்கி வந்த ஜியோவின் சலுகை, இன்றுடன் முடிவடைவதால் வாடிக்கையாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தொலைத்தொடர்பு துறையில் கால்பதித்து பெரும் புரட்சியையே முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இலவச சேவை அறிவிப்புகளால் மிக குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இலவச சேவைகளால்சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ள ஜியோவின் இலவச டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைகின்றன.
இதன் பிறகு ஜியோ தொலைபேசி எண்ணை பயன்படுத்த வேண்டுமானால், உறுப்பினர் கட்டணமாக 99 ரூபாய் செலுத்தி,ஜியோ பிரைம் எனும் திட்டத்தில் சேர வேண்டும்.ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் இலவச சேவைகளைக் குறைந்த செலவில் பெறலாம் எனவும் எந்த ரீசார்ஜும் செய்யவில்லை என்றால் சுமார் 90 நாட்களுக்குள் ஜியோ சிம் செயலிழந்துவிடும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும், இதுவரை ஜியோ பயனர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமே ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இன்றைக்குள் 99 ரூபாய் செலுத்தி ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட இருப்பதாகஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் கடந்த டிசம்பர் வரை அறிவிக்கப்பட்டிருந்த இலவச சேவைகள், மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக் காரணமாக, இன்றுவரை (மார்ச் 31) நீட்டிக்கப்பட்டிருந்தது. அதைபோல் இலவச சேவையை இன்னும் நீட்டிப்பார்கள் என்று வாடிக்கையாளர்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், கடைசி அவரை அப்படி எந்த அறிவிப்பும் வராததால் வாடிக்கையாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.