June 12, 2017
தண்டோரா குழு
உத்திரப் பிரதேசத்தில் மனைவியின் வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்ற கணவரை மனைவி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிலாவலி கிராமத்தில் வசித்து வருபவர் நேத்ரபால் சிங். இவருக்கும், நீது சிங் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நிகழ்ச்சி ஓன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள நீது சிங் அங்கு வந்துள்ளார். அப்போது நீது சிங் வாட்ஸ் அப்மூலம் வேறொருவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனை கவனித்த நேத்ரபால் நீ யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாய், உனது ஃபோனை கொடு என கேட்டுள்ளார். ஆனால், நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவரது மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்த்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மனைவி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த நேத்ரபால் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், பாதிக்கப்பட்டவர் தற்போது வரை காவல்நிலையத்தில் புகார் அளிக்காததால், நீதுவின் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.