August 12, 2016
தண்டோரா குழு
திண்டுக்கல் அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் குலதெய்வ வழிபாட்டிற்காக ஒரு மினி லாரியில் திருச்சி வளநாடு பகுதிக்கு வந்துள்ளனர்.
அப்போது வளநாடு விளக்குரோடு பிரிவில் மினி லாரி திரும்பும்போது, மதுரையில் இருந்து திருச்சி வந்த தனியார் பேருந்து மினி லாரி மீது மோதியது. இதில் லாரி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிந்தது. இதனால் லாரியில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 20க்கும் மேற்பட்டோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இதுகுறித்து வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் திண்டுக்கல் அம்மாபட்டியை சேர்ந்த ராம்குமார், பொன்னர் ராஜா, குருமாயி, ரத்தினம், சுப்பம்மாள், பொன்னம்மாள், நல்லையா மேலும் பெயர் தெரியாத மூவர் எனத் தெரியவந்துள்ளது.