March 29, 2025
தண்டோரா குழு
தமிழ்நாடு கூடைப் பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப் பந்து கழகம் ஆகியவை இணைந்து 16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று கோவையில் துவங்கியது.
இன்று தொடங்கிய இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒரு அணி என 38 அணிகளும்,கோவை, தூத்துக்குடி,சென்னை மாவட்டங்களுக்கு இரண்டு அணி என மொத்தம் 41 அணிகள் கலந்து கொள்கின்றன.இப்போட்டிகள் முதல் மூன்று நாட்களுக்கு லீக் போட்டியாகவும் கடைசி இரண்டு நாட்கள் நாக் அவுட் போட்டிகளாக நடைபெறும்.
இப்போட்டிகள் இன்று முதல் ஏப்ரல் 2 – ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள கூடைப் பந்து கழக விளையாட்டு அரங்கம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ கூடைப் பந்து அரங்கிலும் நடைபெறுகின்றது.இந்தப் போட்டிகள் தினமும் காலை 6.00 மணிக்கு துவங்கி 11.00 மணி வரைக்கும் மாலை 3.00 மணிக்கு துவங்கி இரவு 9.00 மணி வரை நடைபெறும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
மேலும் 12″மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் வரும் ஏப்ரல் 8″ம் தேதி முதல் 15″ம் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிக்கு விளையாட தகுதி பெறுவார்கள்
இப்போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.