March 24, 2025
தண்டோரா குழு
குன்னூர் தேயிலை வாரியம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை, ஆகியவை இணைந்து, “டீ கிராப்ஃடிங் 2025”, என்ற நிகழ்ச்சியைக் கல்லூரி வளாகத்தில் இன்று (24.03.2025) நடத்தியது.
இதில் 8 கல்லூரிகளைச் சேர்ந்த உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 6 அணிகளாக இணைந்து 30 நிமிடங்களில் 300 விதமான தேநீர் தயாரித்து அசத்தினர். ஸ்பைஸ் தேநீர், மூலிகைத் தேநீர், மஞ்சள் தேநீர், நெல்லி தேநீர்,துளசி தேநீர், புதினா தேநீர், மசாலா தேநீர், தேன் தேநீர் உள்ளிட்ட விதவிதமான சுவைகளில் மாணவர்கள் தேநீர் தயாரித்தனர். உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறை மாணவர்களின் இம்முயற்சி, இது கலாம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
இதையொட்டி நடைபெற்ற சாதனை விழாவிற்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு. ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார்.
குன்னூர் தேயிலை வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எம். முத்துக்குமார் ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது,
“தேநீர் ஒரு ஆரோக்கிய பானமாகும். தேநீரில் உள்ள கூட்டுக் கலவைகள் சிறந்த மருந்துவ குணம் கொண்டவை. கொரோனா காலக்கட்டத்தில் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக இருந்ததற்கான ஆராய்ச்சியில் மஞ்சளும், தேநீரும் இந்தியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தது தெரியவந்தது. இது குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் தேயிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவையில் தேநீர் திருவிழா நடத்த தேயிலை வாரியம் திட்டமிட்டுள்ளது. தேயிலை அதிக இடங்களில் உற்பத்தியாகிறது.பொதுமக்கள் கலப்படமிடமில்லாத தேயிலைத்தூளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதனால் தேயிலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வாழ்வாதாரம் உயரும்” என்றார்.
இந்தியத் தேயிலை வாரியத் துணைத் தலைவர் பி.ராஜேஷ்சந்தர், உறுப்பினர் கே.கே. மனோஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அதைத்தொடர்ந்து கலாம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழ் வெளியிடப்பட்டது. முடிவில் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறைத்தலைவர் ஆர்.ராஜன் நன்றி கூறினார்.