July 25, 2016
தண்டோரா குழு
வட இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் படோஹி என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகினர், 12 குழந்தைகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படோஹி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெண்டர் ஹார்ட் பப்ளிக் ஸ்கூல் வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த அலகாபாத், வாரணாசி பயணிகள் ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை அறிந்த போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்து சேர்ந்த அவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஜீவன்தீப், ஜீவன்தாரா மற்றும் காயன்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையின் போது, ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டும் தண்டவாளத்தை கடக்க வேன் டிரைவர் முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.