October 22, 2016
தண்டோரா குழு
உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவுக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக முதலவர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவமனைக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து, முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டுச் செல்கின்றனர். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அண்மையில் சந்தித்து சென்று முதல்வர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதையடுத்து, சனிக்கிழமை காலையில் இரண்டாவது முறையாக முதல்வரின் உடல் நலம் குறித்து அறிய, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார். அங்கு , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம், அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், மருத்துவமனையில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவுக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனைத் தலைவர், மருத்துவர்களிடம் தமிழக ஆளுநர் கேட்டறிந்ததாக ஆளுநர் மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.