July 30, 2016
தண்டோரா குழு
கடந்த ஒரு மாதகாலமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகளவு நீர் வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி என்ற அளவிற்கு உயர்ந்தது.
கர்நாடகா பகுதியில் மேலும் கனமழை பெய்து வந்ததால் நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பரிசல் இயக்கத்திற்குக் கடந்த 16ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்தது.
பின்னர் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்து தற்போது விநாடிக்கு 6,000 கன அடியாகச் சரிந்தது. இருப்பினும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனக் கருதிய மாவட்ட நிர்வாகம் பரிசலுக்கான தடையை நீக்கவில்லை.
நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இனி மீண்டும் வெள்ளம் வரக் காலதாமதம் ஆகும் என்ற காரணத்தாலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஆடிப்பெருக்கு விழா வருவதாலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி தற்போது மீண்டும் பரிசல் இயக்கத்திற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனால் சனி, ஞாயிறு, மற்றும் ஆடிப்பெருக்கு விழாவிற்கு அருவியைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.