August 13, 2016
தண்டோரா குழு
தி.மு.கவின் துணைப் பொதுச் செயலர் சற்குண பாண்டியன்(75), இன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். முன்னாள் அமைச்சரான இவர் தி.மு.க துணைப் பொதுச் செயலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சற்குண பாண்டியன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் அவர் காலமானார். அவரது உடல் ராயபுரம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர் 1989, 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மேலும் 1996ல் சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். தற்போது திமுக துணைப் பொதுச்செயலராக பதவி வகித்து வந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் இவருடைய மருமகள் சிம்லா முத்துசோழன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து 1989, 1996 ஆண்டு தேர்தலில் சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக சற்குண பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருடைய உடல் மாலை சுமார் 5 மணி அளவில் தகனம் செய்யப்படும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவரது மறைவிற்கு தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் நேரில் சென்றும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.