July 30, 2016
தண்டோரா குழு
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் தமிழக ஆந்திர எல்லையில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே ஆந்திர அரசு 12 அடி தடுப்பணையை கட்டி முடித்த நிலையில், சமீபமாகப் பெய்த கன மழையால் அணை நிரம்பி வழிகின்றது.
இதனைப் பார்க்க சென்ற பக்கத்து ஊரான பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனு தடுப்பணையில் குதித்து நீந்த முயன்ற போது நீரில் மூழ்கினார்.
இவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை இதனால் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி காவல் துறையினர் ஆந்திர தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தேடுதல் பணியைச் செய்தனர். ஆனால் போதிய உபகரணங்கள் இன்றி தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக முதல்வர் அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.