September 12, 2016
தண்டோரா குழு
கேரளாவில் இருந்து 1976ம் ஆண்டு துபாய்க்கு சாதாரண இயந்திர வல்லுனராகச் சென்றவர் நெரீபரம்பில். இன்று உலகிலேயே உயரமான கட்டமைப்பைக் கொண்ட புர்ஜ் கலிஃபாவில் 22 அடுக்குக் குடியிருப்பை தனதாக்கிக் கொண்டுள்ளது அவரது விடா முயற்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
புர்ஜ் கலிஃபாவில் உள்ள 828 மீட்டர் உயர கட்டிடத்தைச் சுட்டிக்காட்டி இவரது உறவினர் ஒருவர், இதன் உள்ளே நுழைவது கூட நெரீபரம்பிலால் இயலாத காரியம் என வேடிக்கைக்குத் தெரிவித்துள்ளார்.
அதை மனதில் கொண்டு சவாலாக ஏற்றுச் செயல் படத்துவங்கியுள்ளார். 2010ம் ஆண்டு அக்கட்டடத்தில் ஒரு குடியிருப்பு வாடகைக்கு விடப்படவுள்ளது என்பதை விளம்பரத்தின் மூலம் அறிந்துள்ளார். உடனே அங்குக் குடியேறியுள்ளார்.6 வருடங்களில் 900 குடியிருப்புக்களைக் கொண்ட அக்கட்டிடத்தில் 22 குடியிருப்புகளை சொந்தமாக்கிக் கொண்டுள்ளார். அவற்றில் 5 வாடகைக்கு விடப்பட்டு விட்டதாகவும் மற்றவற்றுக்கு தகுந்த வாடகைதாரர்களைத் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும் நெரீபரம்பில் தெரிவித்துள்ளார்.
1976ம் ஆண்டு ஷார்ஜா சென்ற நெரீபரம்பில் வெப்பக் காற்றுக் கட்டுப்பாடு (air condition) சாதனங்களைப் பழுது பார்க்கும் வேலையைத் துவங்கியுள்ளார். வெப்ப நாடாகையால் இவரது பணிக்கு மிகுந்த அங்கீகாரம் கிட்டத்தொடங்கியது. அதன் மூலம் குடிசை கோபுரமானது.
இவர் தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருந்தவர். பயிர்களின் கழிவுகளை விற்று லாபம் அடைவது போன்ற வியாபார யுக்திகளைத் தனது 11 வயதிலேயே கற்றுத் தேர்ந்தவர். பருத்தி வியாபாரத்தின் போது பருத்தியை மட்டும் விற்று விட்டு அதன் விதைகளைத் தூக்கியெறிந்து விடுவது வழக்கம்.ஆனால் அவற்றிலிருந்து பசை தயாரிக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டியவர் நெரீபரம்பில். 90 விழுக்காடு லாபம் இதன் மூலம் ஈட்டலாம் என்றும் இவர் மக்களுக்குத் தெளிவுபடுத்தியவர்.
புளியின் விதைகளையும் இதேபோல் கால்நடைகளின் உணவுகளுடன் உபயோகிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.இத்தகைய வியாபார யுக்திகளே இவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.