July 2, 2016
தண்டோரா குழு
மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் பேருந்து அரசு பேருந்து இரவு 1:30 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்திவைத்துவிட்டு அதன் ஓட்டுனரும் நடத்துனரும் அதிலேயே உறங்கினர். பின்னர் காலை 5:30 மணிக்கு மீண்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்பதற்காக சுமார் 4 மணிக்கு எழுந்த இருவரும் அருகில் இருந்த கட்டணக் கழிப்பிடத்தில் சென்று குளியல் போட்டுள்ளனர்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்திய மர்மநபர் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். விடியற்காலை என்பதால் பேருந்து நிலையத்திலும் அதிக கூட்டம் இல்லை. மேலும் குளியலறையில் இருந்ததால் இருவருக்கும் வண்டியை எடுத்துச்செல்லும் சத்தமும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் குளித்துவிட்டு வந்து பார்த்த இருவருக்கும் பேருந்து காணவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் இங்கும் தேடிப்பார்த்த போதும் பேருந்து இல்லாததால் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
பின்னர் விசாரணை நடத்திய காவல்துறையினர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதுமட்டுமின்றி போக்குவரத்துத்துறையினரும் பேருந்து குறித்த தகவல்களை மற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அந்த பேருந்து சிவகங்கை அருகேயுள்ள திருமாஞ்சோலையில் சாலையோரம் நிற்பதாக தகவல் வந்ததை அடுத்து காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் சென்று பேருந்தை மீட்டு வந்தனர்.
பின்னர் சோதனை செய்ததில் எந்த ஒரு பொருளும் திருடப்படவில்லை எனவும், எங்கும் ஒரு கீறல்கூட விழவில்லை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வாகனம் ஓட்டத்தெரிந்த யாரோதான் இதை எடுத்து வந்துள்ளனர். அதுவும் மது போதையில் இருக்கும் நபர் ஒட்டியிருந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் ஆனால் இவ்வளவு தொலைவு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் ஒட்டிவந்துள்ளது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு நிவர்த்தியான யாரவது ஒருவர் பேருந்தை எடுத்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.