August 22, 2016 தண்டோரா குழு
ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர் மற்றும் ஜித்து ராய் ஆகியோருக்கு கேல் ரத்னா விருது.
விளையாட்டுத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒவ்வொரு வருடமும் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கி கெளவித்து வருகிறது.
அதன்படி இந்த வருடம் ரியோ ஒலிம்பிக்கில் சாதித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த சிந்து (பூப்பந்து), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்), ஜித்து ராய் (துப்பாக்கிசுடுதல்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) ஆகியோருக்கு 2016ம் ஆண்டிற்கான கேல் ரத்னா அறிவித்து கௌரவித்துள்ளது மத்திய அரசு.
மேலும், பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் விருதுகளும், விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தடகள பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் தயால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, நீச்சல் பயிற்சியாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்படவுள்ளது.
அதைபோல் கிரிக்கெட் வீரர் ரஹானே, லலிதா பாபர், சிவ தபா, அபூர்வி சாண்டெலா உள்பட 15 விளையாட்டு வீரர்களுக்கு 2016ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.