September 30, 2016
தண்டோரா குழு
ராம்குமார் உடல் பரிசோதனை குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராம்குமாரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தனியார் மருத்துவர் இடம் பெற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 18-ம் தேதி புழல் சிறையில் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதை ஏற்க மறுத்த அவரது தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனியார் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்று கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர், 5 பேர் அடங்கிய டாக்டர்கள் குழுவில் இடம்பெறுவார் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துப் பரமசிவம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்த குழுவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சுதிர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாளை ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.