September 22, 2016
தண்டோரா குழு
ஆப்பிள் நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான ” கோகோ “நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் மகன்.
சீனாவில் சுமார் ரூ.22,300 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான வாங் ஜியான்லினின் ஒரே மகன் வாங் சிகாங். தற்போது 28 வயதாகும் இவர், “அலாஸ்கான் மலாமியூட்” வகையைச் சேர்ந்த ஒரு நாயை “கோகோ” என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வருகிறார்.
“கோகோ”வுக்காக விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் வாங் சிகாங்.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான “ஐ-ஃபோன் 7′ கடந்த வாரம் சீனாவில் விற்பனைக்கு வந்தது. சுமார் 1,197 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.80 ஆயிரம்) விலை மதிப்புடைய இந்த ஐ-போனை தனது நாய்க்கு பரிசளிக்க விரும்பினார் சிகாங்.
இதற்காக மொத்தம் ரூ.6.4 லட்சம் மதிப்புள்ள 8 ஐ-போன்களை அள்ளிவந்து நாய் முன் குவித்துவிட்டார். அதனை புகைப்படங்கள் எடுத்து சமூக வளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
முன்னதாக ரூ.24 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கடிகாரங்களை தனது நாய்க்கு அவர் கடந்த ஆண்டு பரிசளித்திருந்தார்.
நாய்களை ஒருபுறம் சிலர் துன்புறுத்தி வந்தாலும் மறுபுறம் சிகாங்கை போல் சில குடும்பத்தில் ஒருவாராய் பார்த்து தான் வருகின்றனர். எனினும், பணத்தை வீணடிக்கும் சிகாங்கின் செயலை செய்து வருகிறார் என்று சிலர் விமர்சனம் செய்து தான் வருகின்றனர்.