February 9, 2018
tamilsamayam.com
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் முதல் முறையாக நடக்கும் ஐஸ் கிரிக்கெட்டில், முன்னாள் அதிரடி மன்னன் சேவக் அணி பாகிஸ்தானின் அப்ரிதி அணியிடம் தோல்வியை சந்தித்தது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளின் பின்னணியில் உள்ள செயிண்ட் மோர்டிசின் உறைந்த ஏரியில் ஐஸ் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில்,பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
இன்றும் நாளையும் நடக்கவுள்ள இப்போட்டியில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக் தலைமையிலான டைமண்ட் லெவன் அணியும், முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிதி தலைமையிலான ராயல்ஸ் லெவன் அணியும் மோதுகின்றன.
போட்டி நடக்கும் செயிண்ட் மோர்டிசில், நேற்று -7 டிகிரியும், இன்று -11 டிகிரியும் குளிர் நிலவியது. உறையவைக்கும் இந்த குளிரில், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் விளையாடினார்கள்.
சேவக் ‘அதிரடி’:
இந்நிலையில் ‘டாஸ்’ வென்ற டைமண்ட்ஸ் அணி கேப்டன் சேவக் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய டைமண்ட்ஸ் அணியின் துவக்க வீரர் சேவக், ராயல்ஸ் அணியின் அக்தர் வீசிய போட்டியின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
அதிரடியாக சிக்சர் மழை பொலிந்த சேவக் 62 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். தொடர்ந்து வந்த சைமண்ட்ஸ் ஓரளவு கைகொடுக்க, டைமண்ட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை துரத்திய அப்ரிதி அணிக்கு ஓவைஸ் ஷா (74*) அரைசதம் அடித்து கைகொடுக்க, அப்ரிதியின் ராயல்ஸ் அணி 15.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.